Friday, December 28, 2007

இல்லற இயலும் சமணமும்

சமண அவதூறுகள் 2

இல்லற இயலும் சமணமும்!


சமணம் இல்லறத்தை வெறுத்தது! - அவதூறு 2


சமணத்தை நோக்கி வீசப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஏன் மெத்தப் படித்தவர்களையும் மயங்க வைத்த கேள்வியும் இதுதான். சமணத்தை முடக்கவும், பாமர மக்களை மயங்க வைக்கவும் சமணத்தை எதிர்த்தவர்கள் எடுத்துக் கொண்ட முக்கிய ஆயுதம் இதுவென்றால் அது மிகையல்ல. சமணம் இல்லறத்தை வெறுத்தது, சமணத்திற்கும் இல்லறத்திற்கும் வெகு தூரம் என்று சொல்லி சொல்லியே ஆட்சியை பிடித்த சமயங்கள் பல உண்டு. ;-)


சமணம் இல்லறத்தை வெறுத்ததா?

உலகியல் ஒழுக்கங்களை அல்லது உலக இயல்பை இரண்டு அறங்களாகப் பிரித்துப் பார்க்கிறது சமணம். இந்திய சமயங்களில், முதன் முதல் “இல்லறம்”, “துறவறம்” என்றும் தனி தனியே ஒழுக்கங்களை எடுத்தோம்பிய சமயம் சமணமாகத்தான் இருக்கும்!

மக்களை நன்வழிப் படுத்தி அவர்களை பாங்குற வழிநடாத்தி செல்ல “சிராவக தர்மம்” என்னும் இல்லற தர்மத்தை வகுத்துக் கொடுத்து, உலக இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகப்பற்றைத் துறந்து வீடுபேறடைய “யதி தர்மம்” என்னும் துறவற தர்மத்தை வகுத்துக் கொடுத்து வழங்கியது சமணம் என்றால் அது மிகையல்ல!


“இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
புல்ல உரைப்பது நூல் - அருங்கலச் செப்பு (60)


வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் - அஃதாவது, உலக முதல் முனைவனான “ஆதிபகவனால்” அருளப்பட்டது முதல் நூலாகும். மேலே காட்டியப் பாடல் சொல்வதுப் போல் அவ்வாறு அருளப்பட்ட நூல் இல்லறமும், துறவறமும் ஆகிய இரண்டு அறங்களையும் கொண்டு விளங்கும் என்றும் அறிவுறுத்துகிறது. இதுப்பற்றி மேலும் அறிய என்னுடைய தொல்காப்பியர் என்னும் கட்டுரையைப் படிக்கவும்.

இவ்வாறு ஆதிபகவன் இரு அறங்களையும் அருளியதோடு அல்லாமல் அவ்வாறு நடந்துக் காட்டினார். இல்லறத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய பின் துறவறத்தை மேற்கொண்டார் என்றும் கீழே வரும் பாடல் குறிக்கிறது.


“மன்னுயிர் காத்தலான் மனம்விட்டு அருளினொடு
இன்னுயிர் உய்கஎன இல்லறமும் இயற்றினையே
புன்மைசால் அற நீக்கிப் புலவர்கள் தொழுது ஏத்தக்
தொன்மைசால் குணத்தினால் துறவரசாய்த் தோற்றினையே”
- யாப். விருத்தி (சூ. 84)


“ஆதியாய் உலகியல்பை அளித்தாய் நீயே!” - தோத்திரத் திரட்டு.


மேற்கூறியப் பாடல் மூலம் ஒன்று புலப்படுகிறது. உலகிற்கு முதன் முதலாய் இல்லறம், துறவறம் என்று வகுத்துக் கொடுத்தது அருக கடவுளான “ஆதிபகவன்” என்று அழைக்கப்படும் “ஆதிநாத”ரே என்பதும் பெறப்படுகிறது.


இரண்டு அறங்களும் ஒன்றே!


“பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம் (35)

வாழ்க்கைக்கு தேவையான செல்வங்கள் பெற்று, அதை பலரும் பயன்பெற பகுத்துத்தந்து கூடி வாழும் இல்லறமும், முற்றுந்துறந்து, தவநிலை தவறாமல் நிற்கும் துறவறமும் ஒன்றுதான் என்று மேலே கூறியப் பாடல் சொல்கிறது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம். “சீவகசிந்தாமணி” என்னும் ஒப்பற்ற காவியம் பாடிய “திருத்தக்கதேவர்“ அவர்கள் அருளிய “நரிவிருத்த’த்தில் தான் மேலே கூறியப் பாடல் வருகிறது.

அம்மட்டோ,


“வினைகாத்து வந்த விருந்துஓம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின் - புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்துஓம்பிச்
சொலெதிர் சொல்லாள் எனில்” - அறநெறிச்சாரம் (157)

இல்லறத்தின் தர்மத்தைக் காத்து, வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தினரை நோக்கி காத்திருக்கும் இல்லறத்தானின் இல்வாழ்க்கை உயர்த் தவத்தினை விட சிறந்தது என்று மேலே கூறப்பட்டப் பாடல் கூறுகிறது.

எங்கே மனதைத் தொட்டு சொல்லுங்கள், மேலே கூறியப் பாடலகளில் திருக்குறளின் சாயல் தெரியவில்லை?. திருக்குறளின் 47 & 48 ஆவது குறட்பாக்களை இங்கே நினைத்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.

மேலே கூறியப் பாடல்களின் மூலம் பகுத்துண்டு பல்லூயிர் ஓம்பும் இல்லறமும், ஒழுக்கம் மாறா தவநிலைத் துறவறமும் ஒன்றே என்பது பெறப்படுகிறது.

கட்டுரையை முடிக்கும் முன் கீழே வருவனவற்றை கொஞ்சம் படித்து வையுங்கள். :-)




சமணமும் தமிழும் (பக்கம் 28)

“தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர்கள், சமணர்கள் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர். சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ‘இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத்தானே இருக்கிறார்கள்?’ என்று கேட்டார்.

“நீங்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்கிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத்துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும், மிக உயர்ந்த நிலையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப் போன்றுதான் உடை உடுத்தி இருப்பார்கள்” என்று கூறியபோது அந்த நண்பர், ‘அப்படியா” என்று அதியப்பட்டார்” என்று மயிலையார் எழுதியிருக்கிறார்.


முடிபு

இப்படித்தான் இருக்கிறது இன்றைய தலைமுறையினரின் சமணப் பற்றியப் புரிதல்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, திருக்குறளில் காமத்துப்பால் சொல்லப்பட்டிருக்கிறது, அதனால், திருக்குறள் சமண நூலாக இருக்க முடியாது என்பார்கள். அவர்கள் காமரசம் சொட்ட சொட்ட எழுதப்பட்ட “சீவக சிந்தாமணி” யை மறந்துவிட்டார்கள் போலும்; திருத்தக்க தேவர் என்னும் சமண பெரியார் அன்றோ அந்நூலை வடித்தது? தங்கள் வசதிக்காக மறந்துவிடுகிறார்கள்! :-)


யான், இணைய அன்பர்களுக்கும், மற்ற சகோதர நண்பர்களுக்கும் கூறுவது யாதெனின்? சமணத்தை நேரடியாகப் படியுங்கள். சமணத்தைப் பற்றிய அறிய நிறைய தமிழ் நூற்கள் உண்டு. குறிப்பாக, இல்லற தர்மத்தை அறிய, அறநெறிச்சாரம், அருங்கலச் செப்பு போன்ற நூற்கள் உதவும்.


அறம் மறவற்க; அறமல்லது துணையில்லை!!

இரா.பானுகுமார்,
சென்னை 61

Thursday, November 29, 2007

சமண அவதூறுகள் - 1

சமண அவதூறுகள் - 1

தேனினினும் இனியது நம் தமிழ் மொழி. அம்மொழியின் வளர்ச்சிக்கு
அரும்பாடுப்பட்டோர் பலர். அவர்களுள் சமணர்கள் தனித்துவம்
மிக்கவர்கள். ஆம். தமிழின் இனிமையைத் தனியாய் உணர்ந்தவர்கள்
அவர்கள். இதனாற்றான் ஒரு புலவன்,

"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவால் நிறைந்த அறமாண்புடையோர்
தமிழினிதருமை தனியா யுணர்ந்தோர்
கருவிநூற் காவியம் கழறும் பெரியோர்
கால கதியாற் கடை நிலைப்படுவோர்
தம் வயப்படுவது சமணகாலம்
" - தனிப் பாடல்

அந்தச் சமண காலத்தில் எழுந்த தமிழ் நூற்கள்தான் எத்தனை!
எத்தனை!! ஐம்பொரும் காப்பியங்களில் மூன்றையும்,
ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஐந்தையும் வழங்கி தமிழன்னைக்கு
அழகுப் பார்த்தது சமணம்! அதுமட்டுமா? தமிழுக்கு முதல் முதல்
இலக்கணம் (தொல்காப்பியம்) கண்டது சமணமே. அவ்வளவு ஏன்?
நாம் இப்போது பயன்படுத்துவதும் சமண இலக்கணமே!!
(நன்னூல்).

இவையனைத்தும் நமக்கு அருளினோர் சமணர்களேயாவர்.
அதுவும் பிறப்பால் தமிழ்ச் சமணர்கள். இவர்களுக்கு தமிழ்
நாட்டில் விளைந்த இன்னல்கள் ஏராளம்! ஏராளம்!! எதற்காக
இந்த இன்னல்கள்? அதற்கு நிறைய காரணங்கள் இருந்த
போதும், மிக முக்கியமானதாக ஒரே ஒரு காரணத்தை கூறுவோம்!


அந்த முக்கியக் காரணம். வைதிக வேதத்தை எதிர்த்ததுதான்.
வேதத்தை ஏன் எதிர்க்கவேண்டும்? யாகம் என்ற பெயரால்
அப்பாவி உயிர்களை பலியிட்டது வைதிக வேதம். யாகத்தில்
மிருகங்கள் பலியிடுவதன் மூலம் அவை நற்கதியே அடைகின்றன
என்று அச்செயலுக்கு அவை நியாயமும் கற்பிக்க முனைந்தன.

இதனை எதிர்த்து எழுந்ததுதான் தமிழ்மறை!


"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
" - திருக்குறள் (259)


சமணம் உயிரின்பாற்ப் பட்டது. எல்லா உயிரும் ஒன்றே! உயிர்களில்
ஏற்றத் தாழ்வுகள் இல்லை. உயிர்கள் தங்கள் தங்கள் செயல்களினாலே
உயர்வும், தாழ்வும் அடைகின்றன. பிறப்பினால் உயர்வு தாழ்வை
அவை என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை.


"பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்.." - திருக்குறள் (972)

என்றும்,


"பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
இறைவன் எனஉணரற் பாற்று
" - அருங்கலச் செப்பு (37)


என்றது. நீலகேசி,(கி.பி. நான்காம் நூற்றாண்டு) என்னும் நூலில்
இதுப்பற்றி கூறியதைப் படித்துக் கொள்க.


சுருக்கமாக, சொல்வோமானால் சமணம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது!
வேதமதம் வேளாளச் சைவத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு
சமண மதத்தை அழிக்கத் தலைப்பட்டது. சமணத்தைப் பற்றிய
அவதூறுகளை மக்களிடையே பரப்பப்பட்டன. இப்பொய் பிரசாரத்தை
மக்களும் நம்பலானார்கள். சமணர்கள் எழுதிய நூற்கள் அழிக்கப்பட்டன.
அவர்களுடைய நூற்கள் பிற சமய நூற்கள் ஆக்கப்பட்டன. அருகக்
கடவுள் வாழ்த்து விநாயகர் வாழ்த்தாக மாற்றப்பட்டது. அருகன்
கோயில்கள் சைவ, வைணவ கோயில்கள் ஆயின. இதில் வேடிக்கை
என்னவென்றால்? அதாவது, வேதமதம், சமணத்தை அழிக்க
சைவமதத்தை கூட்டு சேர்த்துக் கொண்டது என்று சொன்னேன்.
இல்லையா?

சமணம் வீழ்ந்ததும், வேதமதம் சைவத்தை அழித்தது. சைவ
வேளாளர்கள் தாழ்ந்துப் போனார்கள். சைவர்கள் நிறுவகித்து வந்த
கோயில்கள் வேதமதத்தினர் தம் வசப்படுத்தினார்கள். சைவ
வேளாளர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு
துரத்தப்பட்டார்கள். உதாரணம்: சிதம்பரம் கோயில்.


சரி. விடயத்திற்கு வருவோம். சமணத்தைப் பற்றிய அவதூறுகள்
என்னென்ன? அவைகள் உண்மைதானா? அதற்கு ஆதாரம்
என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வது தான்
இக்கட்டுரையின் நோக்கம்.


சமண மதம் நாத்திக மதம் - அவதூறு ஒன்று!

சமண மதம் நாத்திகமா?

இந்த கேள்வியை தற்போதைய வலைஞர்களை கேட்டால்
பெரும்பாலோர் நாத்திகம் என்றுதான் பதில் அளிப்பார்கள்.
அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நடைபெற்று வந்த
பிரசாரத்தின் வலு அப்படி.


சமணம் ஆத்திகமே!


சமணம் இறைவனை, இறைமையை (இறைத்தன்மை) ஏற்றுக்கொள்ளும்
மதமே. அவ்வகையில் அது ஆத்திக மதமே!

சமணம் உயிரின்பால் பட்டது என்பதை முன்னமே சொன்னேன்.
எந்த ஒரு ஆன்மாவும் சுயரூபத்தில் இறைவன்தான். ஆனால்,
அவைகள் வினைத்துகள்களால் அழுத்தப்பட்டு தன்னிலை மறந்து
மடமையில் ஆழ்ந்திருகின்றன.

எந்த ஒரு ஆன்மாவும் முயன்றால் இறைவனாக முடியும்.

"தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்
" - அறநெறிச் சாரம் (77)


ஆனால், அது கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அஃதாவது, இவ்வுலகை யாரொருவரும் படைத்திலர்;
யாரொருவரும் காப்பவரும் அல்லர்; யாரொருவரும்
அழிப்பவரும் அல்லர்.

சற்று பொறுங்கள். கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா?
அப்படியானால், அது நாத்திக மதம்தானே? என்று யாராவது
கேட்டலாம். இந்தியச் சமயங்கள் தவிர வேறு எந்த சமயமும்
இக்கேள்வியை கேட்டிருந்தால் யான் நாத்திக மதம் என்றுதான்
கூறியிருப்பேன். ஏன்னென்றால் அவர்கள் கூற்றுப்படி கர்த்தா
வாதத்தை ஏற்காத எந்த மதமும் நாத்திகம்தான். ஆனால்,
இந்திய மதங்களைப் பொருத்தவரை நாத்திகம் என்ற பேச்சுக்கே
இடமில்லை. இந்தியப் பழஞ்சமயங்களில் சரிபாதி நாத்திக
சமயங்கள்தான். தெரியாதவர்கள், தெரிந்தவர்களை கேட்டு
தெரிந்துக் கொள்ளுங்கள் :-)

பின் ஏன் சமணம் நாத்திகம் என்று ஏளனப்படுத்தப்பட்டது?
ஏன்னென்றால் சமணம் வேதத்தை எதிர்த்தனால்தான், சமணம்
நாத்திக மதம் என்று முத்திரைக்குத்தப்பட்டது. திராவிட சிசு
என்றழைக்கப்பட்ட திருஞான சம்பந்தர் பாடிய தேவாரமும்,
பெரியப் புராணமும்தான் அதற்கு சாட்சி. அங்கே படித்துத்
தெரிந்துக் கொள்ளுங்கள்.

காட்டுக்கள் சில:

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமனோடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
"

"வேட்டு வேள்வி செய்யும் பொருளை விளி
மூட்டு சிந்தை முரட்ட மண் குண்டரை
ஒட்டி வாது செய்யத் திருவுள்ளமே
"

"அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் சிரங்களை
சிந்தவாது செயத் திருவுள்ளமே
"

என்று சிவபெருமானை அழைக்கிறார்!


இரா.பானுகுமார்,
சென்னை.

Sunday, November 25, 2007

தீபாவளி திருநாள்

தீபாளிகாயா


நம் பாரத நாட்டில் கொண்டாடப்பட்டுவரும் பண்டிகைகளில் மிக
பிரபலமாகக் கொண்டாடப்படுவது "தீபாவளி" பண்டிகையாகும்.
இந்திய மதத்தினர் அனைவரும் இப்பண்டிகையைக் கொண்டாடி
வருகின்றனர். தற்போது, இந்தப் பண்டிகையை பிற நாடுகளும்
அங்கீகரித்து வருவதால், இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு
வரும் பண்டிகையாக மாறிவருகிறது.


தீபாவளி:

தீபாவளி = தீபம் + ஆவளி. தீபங்களின் வரிசை என்று பொருள்.
தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது? அதற்கு காரணம் என்ன?
ஏன் வரிசையாக தீபம் ஏற்றி வைக்கிறார்கள் என்பதனை
இக்கட்டுரையின் மூலம் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்.


இந்தியாவில் தோன்றியச் சமயங்கள் அனைத்தும் இப்பண்டிகையைக்
கொண்டாடி வருகின்றன என்பதை முன்னமே பார்த்தோம். ஒவ்வொரு
இந்தியச் சமயங்களும் இப்பண்டிகையை ஒற்றுமையாகக் கொண்டாடி
வந்தபோதும் அதற்கு அவைகள் சொன்ன காரணங்கள் - வெவ்வேறாக
இருக்கின்றன. ஏன் இந்த முரண்பாடுகள்? ஏதாவது ஒன்றுதானே
சரியான காரணமாக இருக்க முடியும்? இந்த கேள்வி எனக்கு மட்டுமல்ல
பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்? இல்லையா! அந்த கேள்விக்கு
விடைக்காண முயற்சிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.



மற்ற மதங்களில் தீபாவளி:

தற்போது, இந்தியாவில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதால்,
இப்பண்டிகை இப்போது இந்துக்கள் பண்டிகையாகவே
கொண்டாடப்பட்டுவருகிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களை
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்?


ஒன்றாவது காரணம்:

தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது? என்று தமிழ்நாட்டு இந்துக்களை
கேட்டால், அவர்கள் பெரும்பாலோர் சொல்லும் முதல் காரணம் இந்த
பதிலாகத்தான் இருக்கும். அந்நாளில்தான் கிருஷ்ணர், நரகாசூரனை
வதம் செய்தார் என்றும் அவன் இறந்த இந்த நாளை மக்கள் அனைவரும்
தீபாவளியாகக் கொண்டாடி வருகின்றனர் என்பார்கள். இந்த கதை
வடநாட்டில் வழங்கிவருகிறதா? என்பது சந்தேகமே. இந்தக் கதை
தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னங்கேறன்? ;-)


இரண்டாவது காரணம்:

கொஞ்சம் படித்தவர்களைக் கேட்டால் [ ;-)] இந்த நாளில், இராமர்
வனவாசம் முடித்து அயோத்தி திரும்பியதால், அயோத்தி மக்கள்
அனைவரும் தீபம் ஏற்றிக் கொண்டாடினர் என்பார்கள். இந்த காரணம்
வலுவானதாக இல்லை. இராமர் வனவாசக் காலத்தில் அவனுடைய
தம்பி பரதன் அயோத்தியை ஆண்டு வந்தான். ஒரு வேளை
பரதனுடைய ஆட்சி அவ்வளவு மோசமானதாக இருந்திருக்குமோ?
சும்மா ஒரு விளையாட்டிற்காகதான்! :-)

சரி. வால்மீகி இராமயணத்தில் இச்செய்தி வருவதாக சொல்கிறார்கள்?
அன்பர்கள் யாராவது வால்மீகியில் எந்த இடத்தில், எத்தனையாவது
ஸ்லோகத்தில் இச்செய்தி சொல்லப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிட்டு
சொல்ல முடியுமா? அல்லது ஏதாவது வலைச்சுட்டி? இராமயணத்தில்
"தீபாவளி" என்ற சொற்றொடர் ஆண்டு வருகிறதா? வால்மீகியைத் தழுவி
எழுந்த அல்லது எழுதப்பட்ட அனைத்து இராமாயணங்களிலும்
இச்செய்திச் சொல்லப்பட்டு இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கு
விடைக் காணவேண்டும்!


மூன்றாவது காரணம்:

இன்னும் சிலர் மகாபலி, கீழ் உலகத்தில் இருந்து, கிருஷ்ணன்பகவான்
ஆணைப்படி பூமிக்கு வந்த நாள் என்று கதை சொல்வார்கள்.



காரணம் நான்கு:

சைவர்கள், சிவபெருமான், "அர்த்தநாரீஸ்வரராக' அன்றைய நாளில்
காட்சியளித்ததாக கூறுவார்கள்.


இன்னும் நிறையக் காரணங்கள் கூறப்பட்டாலும் ஏதாவது ஒன்றுதானே
தீபாவளிக் கொண்டாடுவதற்கு காரணமாக இருக்கு முடியும்.

மேலும், மேலே கூறப்பட்ட காரணங்களில் எந்த ஒரு காரணத்திற்காக
இந்துக்கள் தீபாவளி கொண்டாடு வருகின்றனர் என்பதை அவர்களே
தெளிவாகச் முடிவு செய்துக் சொல்லட்டும்.

இவ்வளவும் ஒரே ஒரு உண்மையை மறைக்க சொல்லப்பட்ட
கட்டுக்கதைகள் என்பதுதான் நிதர்சணம். அந்த உண்மைதான் என்ன?



மகாவீரர் பரிநிர்வாண நாள்:

சமணர்களின் கடைசி தீர்த்தங்கரர் பகவான் வர்த்தமான மகாவீரர்.
அந்த நாளில் தான் வீடுபேறு அடைந்தார். அந்த நாளை சமண
மக்கள் யாவரும், அரசன் ஆணைப்படி, வீடுகளில் தீபங்களை ஏற்றி
வைத்தார்கள். அந்நந்நாளே இன்றுவரை அனைவராலும்
கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் பட்டாசுகள் வெடிப்பதுப்
போன்ற சம்பிரதாயங்கள், எல்லாம் பின் நாளில் ஏற்பட்ட வழக்கங்கள்.

சமணர்களின் திருநாளை ஏன் இந்துக்களும் கொண்டாட வேண்டும்
என்ற கேள்வி எழலாம்? அதற்கு யான் சொல்லும் சமாதானம்
இதுவே. ஒரு காலத்தில், இந்திய தேசம் முழுதும் சமண மதமே
பரவியிருந்தது. பாரத மக்கள் அனைவரும் சமணர்களாகவே
இருந்தார்கள். பின் காலம் செல்ல, செல்ல இந்து மதத்தின்
ஆதிக்கத்தினால் மக்கள் இந்து மதங்களுக்கு மாறத் தொடங்கினர்.
அப்படி மாறிய மக்களுக்கு அந்த திருநாளைக் கொண்டாட இந்து
மதத்தில் ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட வேண்டும் இல்லையா?
அப்படி சொல்லப்பட்டவைத்தான் மேலே கூறப்பட்ட காரணங்கள்.


இலக்கிய ஆதாரங்கள்:

சமண இலக்கியத்தில் 'தீபாவளி'

பாரத இலக்கிய வரலாற்றில் "தீபாவளி" என்ற சொற்றோடர் சமண
இலக்கியங்களில் தான் முதன் முதலாக வழங்கி வந்திருக்கிறது.
ஆச்சாரியர் பத்ரபாகு முனிவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்
வாழ்ந்த சமண முனிவர். அந்த முனிவரால் என்பவரால் எழுதப்பட்ட
"கல்ப சூத்திரம்' என்னும் பிராகிருத நூலில் பின்வருமாறு
கூறப்பட்டிருக்கிறது.

"மகாவீரர்" என்ற ஞான ஒளி மறைந்துவிட்டதால், தீப
விளக்கையாவது ஏற்றி வைப்போம்" என்று காசி, கோச மக்களும்,
பதினாறு கண அரச மக்களும், தங்கள் வீடுகளின் முன் தீபம்
ஏற்றி வைத்தார்கள்".


மற்றும், கி.பி. ஆறாம் நூற்றாண்டில், ஆச்சாரியர் ஜினசேன
முனிவர் என்பவரால் எழுதப்பட்ட "ஹரிவம்ச புராணம்" என்ற
நூலில் பின் வருமாறு கூறப்பட்டிருக்கிறது.

"கடவுளர்கள் அந்நாளில் விளக்குகளை வரிசையாக
ஏற்றி வைத்து அவருடைய மோட்சத்தை நினைவுப்படுத்தினார்கள்.
அன்றிலிருந்து பாரத மக்களும் அந்நாளில் தீபங்களை
வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடி வரலானார்கள்".

"தீபாளிகாயா" என்ற சொல்லும் அந்நூலில்தான் முதன்
முதலில் பயின்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "தீபாளிகாயா'
என்றால் "ஞான தீபம் உடலை நீங்குகிறது" என்று பொருள்.
அச்சொல்லில் இருந்து வந்ததுதான் இன்று அழைக்கப்படும் "தீபாவளி"
என்ற திருநாள்.

http://www.cs.colostate.edu/~malaiya/diwali.html
http://en.wikipedia.org/wiki/Diwali

மகாவீரர் இறந்த நாளை ஏன் மக்கள் கொண்டாடவேண்டும்? என்ற
கேள்வியும் எழத்தானே செய்யும்? சமண தீர்த்தங்கரர்கள் வாழ்க்கையில்
"பஞ்ச கல்யாணங்கள்" சிறப்பாகாகப் போற்றப்படுகிறது. தமிழில்
ஐம்பெரும் கலியாணங்கள்" என்று அழைப்பார்கள். இதைப்பற்றி
தனிக் கட்டுரையாக எழுத உள்ளேன். அங்கு படித்துக் கொள்க.
இந்த ஐந்து கல்யாணங்களில் கடைசியாகக் கொண்டாடப்படுவது
தான் 'பரிநிர்வாண கல்யாணம்". மகாவீரர் வீடுபேறடைந்த நாள்.
உயிர்களின் கடைசி நிலை "வீடுபேறு". அதனால், சமணர்கள்
தீர்த்தங்கரர்களின் பிறந்த நாளைவிட அவர்கள் மோட்ச நாளையே
சிறப்பாகக் கொண்டாடுவார்கள். "சிவராத்திரியும்" அவ்வாறே! ;-)


உண்மைத் திருநாள்:

அத்திருநாளில், பகவான் வர்த்தமான மகாவீரரை நினைத்து அவர்
வழிநடப்போம். அவர் வழிப் + படுவோம். அந்நாளில் இரப்பாருக்கு
கொடுப்போம். மற்ற உயிர்களுக்கு அச்சம் ஏற்படாதிருக்க "பட்டாசு
வெடிகளை" தவிர்ப்போம்.

அறம் மறவற்க! அறமல்லது துணையில்லை!!



இரா.பானுகுமார்,
சென்னை

Tuesday, October 02, 2007

சிவபெருமானும் ஆதிநாதரும் - 1

சிவபெருமானும் ஆதிநாதரும்


சைவர்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான். சமணர்களின் முதற் கடவுள்
ஆதிநாதர். இந்திய சமய வரலாற்றில் வேறெந்த கடவுளர்களுக்கும் இல்லாத
ஒற்றுமைகள் இந்த இரு கடவுளுக்கும் இருக்கின்றன. இச்சிறு கட்டுரையின்
நோக்கம் இந்த இரு கடவுளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை ஒப்பு
நோக்கிப் பார்ப்பதுதான். இந்த முயற்சி ஒன்றும் புதிதல்ல. முன்னமே
நிறைய அறிஞர்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். மயிலை. சீனி.
வேங்கடசாமி அவர்களும் "சமணமும் தமிழும்" என்ற தம் நூலில்
கூறியிருக்கிறார். இங்கு அதையே மேலும் விரித்து விளக்கிக் கூற
முயன்றிருக்கிறேன். நிறைய வலைஞர்களுக்கும், வலையுலா
வருபவர்களுக்கும் இது புது கருத்தாகவும்,
செய்தியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.



ஒற்றுமைகள்:



1. சிவபெருமான்: சைவர்களின் முழுமுதற் கடவுள்.
பகவான் ஆதிநாதர்: சமணர்களின் முதற் தீர்த்தங்கரர் (கடவுள்).

2. சிவன்: இவரை "பிறவாயாக்கை பெரியோன்" என்றழைப்பர். யார்
வயிற்றிலும் பிறவாமல் தோன்றிய தலைவன் என்பது கருத்து.
ஆதிநாதர்: இவருக்கும் இப்பெயர் பொருந்தும். இவர் நம்மை போன்று
மனிதனாகப் பிறந்து, இருவினைகளில் இருந்து விடுபட்டு மீண்டும்
பிறவாத நிலையடைந்ததால், பிறவா யாக்கை பெரியோன் என்று
போற்றப்பட்டார்.

3. சிவன்: இவருக்கு இரண்டு மகன்கள். விநாயகன் மற்றும் முருகன்.
ஆதிநாதர்: இவருக்கும் இரண்டு மகன்கள். பரதன் மற்றும் பாகுபலி.

4. சிவன்: ஒரு பழத்துக்காக, இரண்டு மகன்களும் சண்டையிட்டனர்.
ஆதிநாதர்: அரசாட்சிப்பதவிக்காக, இரண்டு மகன்களும் சண்டையிட்டனர்.

5. சிவன்: இச்சண்டையில், இளைய மகனான முருகன் கோபித்துக்
கொண்டு, ஆண்டியாக சென்றான். (பழனியாண்டி)
ஆதிநாதர்: இச்சண்டையில், இளைய மகனான பாகுபலி, தன் அண்ணனிடமே
சண்டையிட்டதை நினைத்து மனம் வெறுத்துப்போய், முற்றும் துறந்து ஆண்டியாக
சென்றான். (கோமடேசுவரர் அல்லது பாகுபலி, சிரவணபெளிகுளம்)

6. சிவன். இவர் சடா முடியுடன் தோற்றமளிப்பதால், கேசவன் என்று
அழைக்கப்பட்டார்.
ஆதிநாதர்: இவர் நீண்ட காலங்கள் தொடர்ந்து தவம் இயற்றியதால், முடி வளர்ந்து,
சடைமுடிக் கொண்டவராகக் காட்சியளித்ததால், இவருக்கும் இப்பெயர் அமைந்தது.

"ஆலநெடு நிழலமந்தனை
காலம் மூன்றும் கடந்தானை
தாழ்சடை முடிசென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை" - திருக்கலம்பகம்


7. சிவன்: சிவனின் இருப்பிடம் கயிலாயமலை.
ஆதிநாதர்: ஆதிநாதர் வீடுபேறடைந்ததும் திருகயிலாயமலை என்ற இதே
இடத்தில்தான்.

8. சிவன்: சைவர்களுக்கு 'சிவராத்திரி" மிக முக்கியமான நாள்.
(ஏன் என்று தெரியாது?)
ஆதிநாதர்: ஆதிநாதர் வீடுபேறு அடைந்த நாளை, சமணர்கள் "சிவராத்திரி"யாகக்
கொண்டாடுகிறார்கள்.

9. சிவன்: சிவனுடைய வாகனம் எருது.
ஆதிநாதர்: ஆதிநாதருடைய "இலஞ்சினம்" (சின்னம்) எருது. எருது அறத்தின்
சின்னமாக கருதப்படுகிறது. ஆதிநாதரே, உலகிற்கு அறத்தைப் போதித்தவர்.
இல்லறம், துறவறம் என்று பிரித்து அறம் உரைத்தவரும் இவரே. ஆதலால்,
இவர் சிலையின் அடியில் எருது சின்னத்தைப் பொறித்து வைத்தனர் சமணர்கள்.

10.சிவன்: இவருடைய பரிவாரத் தெய்வங்களில் "நந்திதேவர்" முதன்மையானவர்.
ஆதிநாதர்: இவருடைய பரிவாரத் (சாசன) தெய்வங்களில் முதன்மையானவர்
கோமுகயட்சன்.

11.சிவன்: இவர் காலனை உதைத்தார். அதாவது எமனை வென்றவர்
என்பது கருத்து.
ஆதிநாதர்: காலன் இறப்புக்கு உருவகம். இறப்பையும், பிறப்பையும் கடந்தவர்
ஆதலால், காலைனை கடிந்தவர் ஆனார்.

"கன்று காலனைக் கடிந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!
தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கட லிறந்தாய்!" - நீலகேசி

12.சிவன்: சிவபெருமான் காமனை (காமத்தை)எறித்தவர்.
ஆதிநாதர்: காம உணர்ச்சி காமனுக்கு (மன்மதன்) உருவகம். ஆதிநாதர்
மோகனீயக் கருமத்தை வென்றவர்.

"களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப" - சீவக சிந்தாமணி

13.சிவன்: இவர் முப்புரத்தை எரித்தார். மூன்று கோட்டைகளை அழித்தார்
என்றும் மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) எரித்தார் என்றும்
சொல்லப்படுகிறது. எங்ஙனமெனில், இவர் இயற்கையாகவே இந்த மூன்றும்
இல்லாதவர். பக்தர் பொருட்டு, அம்மூன்று மலங்களையும் அழித்தவர்.
ஆதிநாதர்: இவரும் முப்புரத்தை எரித்தார் என்று கூறப்படுகிறது. அதாவது
காமம், வெகுளி, மயக்கம் என்ற குணங்களை தன்னிடம் வராமல் தடுத்து
வென்றவர் என்பது கருத்து.

"ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா' - சிலப்பதிகாரம்

14.சிவன்: இவர் மனைவியாகிய உமையாளுக்கு தன் உடம்பில் பாதியைக்
கொடுத்தவர். ஆதலால், "அர்த்தநாரீஸ்வரர்" எனப்பட்டார்.
ஆதிநாதர்: இவருக்கும் "அர்த்தநாரீஸ்வரர்" என்ற திருநாமம் உண்டு.
சமணத்தில். கல்வியையும், அறிவையும் (இருவினைகளை அகற்றியதனால்
பெறப்படும் அறிவு. வாலறிவு என்றும் கேவல ஞானம் என்றும் அழைப்பர்),
மோட்சத்தையும் (நிர்வாணம்) பெண்களாக உருவகிப்பார்கள். ஆதிபகவன்,
இருவகை வினைகளையும் வென்று, கேவல ஞானம் (அறிவு) என்னும்
அரசியைப் பெற்றதனால் (மணந்ததினால்), "அர்த்தநாரீஸ்வரர்"
என்றழைக்கப்பட்டார்.

"பிரச நாள்மலர்ப் பிண்டியிற் கண்டபே ரமுதே
பிறங்கு பேரொளிக் கேவலத் தரசியைப் பிரியா
அரச னேதிரு நறுங்கொண்டை வடதிரு மலைமேல்
அப்ப னேஅடி யேனையும் அஞ்சல்என் றருளே" - திருநறுங்கொண்டைப் பதிகம்

15.சிவன்: இவருக்கு இரண்டு கண்கள் தவிர நெற்றியில் மற்றொரு கண்
அமைந்ததினால், "முக்கண்ணன்" என்று போற்றப் பெற்றார்.
ஆதிநாதர்: இவர் வாலறிவு (கேவல ஞானம்) பெற்றதனால், அறிவை
கண்ணுக்கு உருவகப்படுத்தி "முக்கண்ணன்" என்று அழைக்கப்பட்டார்.
இவருக்கு ஊனக் கண்கள் இரண்டு, அறிவுக் கண் ஒன்று; மொத்தம்
மூன்று கண்கள்.

16.சிவன்: திரிசூலம் என்னும் ஆயுதத்தை வைத்திருப்பவர்.
ஆதிநாதர்: சமணர்கள் மூன்று இரத்தினங்களைப் போற்றுவர். அவை
"திரைரத்னா" என்று வடமொழியில் அழைக்கப்படும். அவை நற்காட்சி,
நல்லறிவு, நல்லொழுக்கம் என்பனவாம். பிராகிருத மொழியில் சூல்
என்பதற்கு மணி என்ற பொருளும் உண்டு. ஆதலால், இவருக்கு
மூன்று இரத்தினங்களைத் தரித்தவர் என்ற கருத்தில் திரிசூலம் காட்டப்படும்.

17.சிவன்: இவரிடம் இருந்தே "ஓங்காரம்" என்ற ஒலி பிறந்ததாகவும்,
அதிலிருந்தே எழுத்துக்கள் தோன்றின என்பார் பாணினி.
ஆதிநாதர்: இவர் தம் மகள்களான பிரம்மி, சுந்தரி என்பவர்களுக்கு
எண்ணும், எழுத்தும் கற்பித்தவர். பிரம்மிக்கு எழுத்தையும், சுந்தரிக்கு
எண்ணையும் கற்பித்தார் என மகாபுராணம் கூறும். தமிழில் சூடாமணி
நிகண்டு பின்வருமாறு கூறுகிறது.

"எண்ணோடு எழத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தி" - சூடாமணி நிகண்டு.

தற்கால எழுத்துக்கள் எல்லாம் பிரம்மி என்னும் எழுத்துருவை அடிப்படையாகக்
கொண்டது என்பது சிந்திதற்பாலது. ஒரு கொசுறுச் செய்தி - எழுத்துக்கள்
வலப்பக்கத்தில் இருந்தும், எண்கள் இடப்பக்கத்தில் இருந்தும் தொடங்கவேண்டும்
என்று ஆதிநாதர் தம் மகள்களுக்கு அறிவுறித்தியதாக "அவஸ்யக நில்யுக்தி"
என்னும் சமண நூல் கூறுகிறது.


முதற் பாகம் முற்றிற்று!


இரா. பானுகுமார்,
சென்னை.